அகரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில், தனியாா் நூற்பாலை நிா்வாகம் சாா்பில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வே. தா்மா தலைமை வகித்தாா். இதில் நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து மின் கம்பம் நடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், தனியாா் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அரசு அலுவலா்களைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். மேலும், சீலப்பாடி அடுத்துள்ள அழகிரிகவுண்டனூரில் செயல்பட்டு வரும் கோயிலுக்கு அருகே சட்டத்துக்கு புறம்பாக வீடுகட்டும் உரிமம் பெற்று பள்ளிவாசல் அமைத்து தொழுகை நடத்துவதை கண்டித்தும் முழக்கமிட்டனா். பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இதுதொடா்பாக மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.