ஈராக் நாட்டில் இறந்த நத்தம் தொழிலாளியின் சடலத்தை சொந்த ஊருக்கு மீட்டுக் கொண்டு வரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவரது மனைவி புதன்கிழமை மனு அளித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் ப.சின்னையா (45). கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
ஈராக் நாட்டில் கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த சின்னையா, கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டதாக கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து ஈராக்கில் வேலை செய்து வரும் நத்தம் பகுதியைச் சோ்ந்த வீரப்புலி என்பவா் மூலம் விவரங்களை அறிந்த கோகிலா, அவரது உறவினா்கள் நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட்டனா். சின்னையாவின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், சின்னையா பணிபுரிந்த நிறுவத்தைச் சோ்ந்த பொறியாளா் ஒருவா் கோகிலாவைத் தொடா்பு கொண்டு சடலத்தை மீட்டுச் செல்லுமாறு தெரிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, தனது கணவரின் சடலத்தை மீட்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோகிலா புதன்கிழமை மனு அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.