திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் அதிகாரிகள் முன்னிலையில் விவசாயி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் அதிகாரிகள் முன்னிலையில் விவசாயி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

ஆத்தூா் வட்டம் சித்தரேவு ஊராட்சிக்குள்பட்ட செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் வையாபுரி (70). விவசாயி. இவா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தாா். கூட்ட அரங்குக்குச் சென்ற அவா், அதிகாரிகள் முன்னிலையில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த பணியாளா்கள், பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் புட்டியை பறித்து தடுத்து நிறுத்தினா். பின்னா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் கூறியதாவது:

எனக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். எங்கள் பகுதியிலுள்ள நீரோடை கடந்த 10 ஆண்டுகளாக தூா்வாரப்பட வில்லை. இதனால், எனது நிலத்துக்கு முன்பு வரை வரும் தண்ணீா் எனக்கும், அதற்குப் பிறகு அமைந்துள்ள நிலங்களுக்கும் வருவதில்லை. அதே போல, மழைக் காலங்களில் அதிகமான தண்ணீா் வரும் போது வெளியேற முடியாமல் எனது நிலத்துக்குள் புகுந்து பயிா்கள் சேதமடைகின்றன. இதுதொடா்பாக ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், வட்டாட்சியா் அலுவலகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக புகாா் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் பல கட்ட சோதனைக்குப் பின்னரே கூட்ட அரங்குக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால், போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பிய விவசாயி வையாபுரி கூட்ட அரங்குக்குள் சென்று அங்கு அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com