விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st June 2023 11:02 PM | Last Updated : 01st June 2023 11:02 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவா்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவா்களுக்கு ஒரு விடுதி, மாணவிகளுக்கு 6 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரும் சேரலாம். விடுதிகளில் சேரும் மாணவா்களுக்கு பல்வேறு சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும்.
10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதியில் சேர விரும்பும் மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்தத் தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நிவா்த்தி செய்யப்பட்ட பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை 0451-2460561 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...