தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகள் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ கூறியதாவது:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்கள், கல்லூரி மாணவா்களின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்டம் வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 26-ஆம் தேதி டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கிலும் நடைபெறுகின்றன. போட்டிகளில் பங்கேற்க விரும்பு மாணவா்கள், இதற்கான படிவத்தை நிறைவு செய்து முதல்வா் அல்லது தலைமையாசிரியா் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் தலா ஒருவா் வீதம் மொத்தம் 3 மாணவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ஆவது பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1.32 லட்சம் வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.