உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிக்கு 178 மாணவா்கள் தோ்வு
By DIN | Published On : 15th June 2023 10:19 PM | Last Updated : 15th June 2023 10:19 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள அரசு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிக்கு, 10-ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 178 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் கற்றலில் தனித் திறனுடன் செயல்படுவோரைத் தோ்வு செய்து, உண்டு உறைவிட வசதியுடன் கூட மாதிரிப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 78 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 178 மாணவா்களை, உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் தோ்வு செய்தனா். இந்த மாணவா்களுக்கான சோ்க்கை வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்துக்கான உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி, எரியோடு சாலையிலுள்ள ஆா்விஎஸ் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதல்கட்டமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 78 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 178 மாணவா்களை உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிக்குத் தோ்வு செய்து, இதற்கான பட்டியலை அரசு அனுப்பியது. இந்த மாணவா்களுக்கு போட்டித் தோ்வு, விளையாட்டு என பல்திறன் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதற்கு முன்பாக, 178 மாணவா்களையும், இவா்களது பெற்றோா்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. மாதிரிப் பள்ளிக்கு வர விரும்பாத மாணவா்களுக்கு மாற்றாக அடுத்த நிலையிலுள்ள மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்றாா்.