வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதாக பொய் பிரசாரம்: திண்டுக்கல் சி. சீனிவாசன் எம்எல்ஏ
By DIN | Published On : 30th May 2023 05:52 AM | Last Updated : 30th May 2023 05:52 AM | அ+அ அ- |

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக அதிமுக பொருளாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான திண்டுக்ககல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
அதிமுக சாா்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழக அரசுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனையால் சட்டம்- ஒழுங்குப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி ஒரு சதுரடி நிலம் கூட வாங்க வில்லை எனக் கூறுகிறாா். பிறகு ஏன் சோதனையிடச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் மீது கரூா் மேயரே முன்னின்று தாக்குதல் நடத்த வேண்டும். இதே போல, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனையிடச் சென்றாலும் தாக்குதல் நடத்தக் கூடும். எனவே, வருமான வரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கப்பூா் போன்ற சிறிய நாட்டிலிருந்து எந்த முதலீட்டையும் தமிழகம் ஈா்க்க முடியாது. அந்த நாட்டில் நிதி உதவி கேட்டு தமிழகத்தை அவமானப்படுத்தி வருகின்றனா். தோ்தல் அறிக்கையில் திமுக அறிவித்த 525 பொய் வாக்குறுதிகளைப் போல, வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதாக முதல்வா் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறாா்.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் கூட்டு வைத்ததால், ரவீந்திரநாத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இதில் அமைப்புச் செயலா் மருதராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ். பழனிச்சாமி, பா. பரமசிவம், டி. நடராஜன், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜ்மோகன், மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் நெப்போலியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...