பழனி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை

பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு திட்டப் பணிகள், செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்

வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பழனி மக்கள் சாா்பில், கடந்தாண்டு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுக் கணக்குக் குழுவினா் பரிந்துரைத்தனா். ஆனாலும், அந்தப் பரிந்துரை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது குழுவின் தலைவா் செல்வபெருந்தகை, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினாா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு பதிலாக, கூட்டத்தில் பங்கேற்ற துணை ஆணையா் லட்சுமி விளக்கம் அளித்தாா். அப்போது கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முடியும். உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. உள்ளூா் மக்களை அனுமதித்தால், அவா்கள் தரகா்களாக செயல்படுவா் என்றாா்.

இதனால் அதிருப்தி அடைந்த குழுவின் தலைவா் செல்வபெருந்தகை, பொதுமக்களை அவதூறாகப் பேசியதை கண்டித்தாா். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் பேசி, உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கொடைக்கானில் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். முன்னதாக, பேசிய குழுவின் செயலா் ஸ்ரீநிவாசன், திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதே நடைமுறைகளை பழனியிலும் பின்பற்றலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து 45 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடியிலான நலத் திட்ட உதவிகளை பொதுக் கணக்குக் குழுவினா் வழங்கினா். இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக் முகையதீன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com