அடிப்படை வசதிகள் கோரி சுமை தூக்கும் பணியாளா்கள் மனு
திண்டுக்கல், ஜூன் 26: டாஸ்மாக் மதுபானக் கிடங்கியில் சுமை தூக்கும் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, சிஐடியு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடியில் டாஸ்மாக் மதுபானக் கிடங்கி சிஐடியு சுமைப் பணித் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.பிச்சைமுத்து தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாவட்டக் குழு உறுப்பினா் சி.பாலசந்திரபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின்போது, டாஸ்மாக் சுமை தூக்கும் பணியாளா்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். கழிப்பறையுடன் கூடிய ஓய்வறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னா், இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனு, டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் கிளைத் தலைவா் ஜே.முகமதுல்லா, செயலா் எம்.சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

