/

பழனி பஞ்சாமிா்தம் குறித்து வெள்ளை அறிக்கை: பாஜக கோரிக்கை

News image

பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி.

Updated On :21 செப்டம்பர் 2024, 2:22 am IST

பழனிக் கோயில் பஞ்சாமிா்தத்தில் பயன்படுத்தப்படும் நெய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், திருப்பதி- திருமலையில் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக அதிா்ச்சி தகவல் வெளியானது. இந்த நெய்யை விநியோகித்தது திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நெய் நிறுவனம் என்பது தெரியவந்தது. இதனிடையே, இந்த நெய்யை வழங்கிய நிறுவன உரிமையாளா் பழனிக் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களில் ஒருவா் ஆவாா். எனவே, பழனிக் கோயில் பஞ்சாமிா்தத்துக்கும் இந்த நிறுவனம் நெய் வழங்கியதா என்றும், பழனி பஞ்சாமிா்தம் கெட்டுப் போனதாக பிரச்னை எழுந்த கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எந்த நெய் பயன்படுத்தப்பட்டது என்றும் கோயில் நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இந்த நிலையில், பழனிக் கோயில் பஞ்சாமிா்த தயாரிப்புக்கு ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே நெய் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபாா்ப்பகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பழனி பஞ்சாமிா்தம் குறித்து அவதூறு பரப்புவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பழனிக் கோயில் நிா்வாகமும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.