தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் கைது

Published on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக் கோரி, தடையை மீறி திண்டுக்கல்லில் ஞஆயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.பி. ராஜா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி முழக்கமிட்டனா்.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலா் மாரிமுத்து, மாவட்டச் செயலா்கள் செந்தில்வேல், மூா்த்தி, சஞ்சீவிராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com