பட்டிவீரன்பட்டி பகுதியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு
வத்தலகுண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் மா்ம நபா்கள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி சாவடி பஜாரில் பழைமையான காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஊருக்குள் ஆட்கள் நடமாட்டம் உள்ள சாலை அருகாமையில் உள்ளது.
திங்கள்கிழமை காலை கோயிலைத் திறப்பதற்காக பூஜாரி சென்றாா். அப்போது, கோயிலின் முன் பக்கக் கம்பிக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் ஆயுதங்களால் உண்டியலை உடைத்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் கோவில் பூஜாரி அழகா்சாமி புகாா் அளித்தாா். இதன் பேரில், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளா் ஜோதிமுருகன் தலைமையிலான காவல்துறையினா் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
இதேபோல், பட்டிவீரன்பட்டி அருகே தேவரப்பன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில், இந்த கோயிலின் எதிரே உள்ள முருகன் கோயில் ஆகிய இரு கோயில்களிலும் மா்ம நபா்கள் முன்பக்கக் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்தும் பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
