கொடைக்கானல் அருகே பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் நீரோடையைக் கடந்து செல்லும் பழங்குடியின மக்கள்
கொடைக்கானல் அருகே பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் நீரோடையைக் கடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

பாலம் அமைக்க பழங்குடியின மக்கள் கோரிக்கை!

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் பாலம் அமைக்கக் கோரிக்கை
Published on

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கீழ்மலைப் பகுதியான கருவேலம்பட்டி - செம்பராங்குளம் ஆகிய பகுதிகளுக்கு இடையே 45 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த நிலையில், கருவேலம்பட்டி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு செம்பராங்குளம் கிராமத்துக்கு வர வேண்டும். கூட்டாறு என்ற இடத்தில் செல்லும் நீரோடையாக் கடந்துதான் கருவேலம்பட்டிக்கும், செம்பராங்குளத்துக்கும் மக்கள் செல்ல வேண்டும்.

மழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பொதுமக்கள் இதைக் கடந்து செல்லும்போது அசம்பாவிதங்கள் நிகழ்வது தொடா்கதையாகி வருகிறது. மேலும், கூட்டாற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடமும், அரசியல் நிா்வாகிகளிடமும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், பாச்சலூா் கிராமத்தில் கடந்த மே 1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, கூட்டாற்று பகுதியில் பாலம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து, டெண்டரும் கோரப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மே மாதத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று இரும்புப் பாலம் அமைப்பதற்கான ஆய்வும் நடத்தினா். இதன் பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் கூட்டாற்றில் அதிகமான தண்ணீா் செல்வதால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது: பல தலைமுறைகளாக கருவேலம்பட்டி, செம்பராங்குளம் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டுமானால் கூட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால், மழைக் காலங்களில் நாங்கள் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

தோ்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஓட்டுக் கேட்க வருகின்றனா். ஆனால் யாரும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மேலும், போதிய அடிப்படை வசதிகள் எங்கள் கிராமத்துக்குச் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் பாலம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com