முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!
தமிழக முதல்வா் ஸ்டாலின் வருகிற 2026-ஆம் ஆண்டு ஜன. 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 25,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக ஜன.2-ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வர உள்ளாா். பின்னா், ஜன.3-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அவா் சிறப்புரையாற்ற உள்ளாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கான புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், வக்கம்பட்டி அருகே சுதநாயகியபுரத்தில் கட்டப்பட்ட ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி உள்பட சுமாா் ரூ.1000 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா்.
முதல்வா் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

