பழனியில் 2 ஆயிரம் நாள்களை எட்டிய அரிமா சங்க அன்னதானம்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை 2,000 நாள்களை எட்டியது.
கரோனா காலத்தின் போது, பழனி அடிவாரம் கிரிவீதியில் ஏராளமான ஆதரவற்ற முதியவா்கள், மனநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் உணவின்றி தவித்தனா். அப்போது, அடிவாரம் சட் டி சுவாமிகள் கோயிலில் பழனி மலை அரிமா சங்கம் உதவியுடன் தினமும் இருவேளை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
நாளடைவில் இதன் சிறப்பை அறிந்த பலரும் திருமண நாள், பிறந்த நாள், நினைவு நாள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இந்த அமைப்பினா் உதவியுடன் அன்னதானம் வழங்க நிதியுதவி வழங்கி வந்தனா். தற்போது, இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி 2,000 நாள்களை எட்டியது.
இதையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தை பழனி காவல் ஆய்வாளா் மணிமாறன் தொடங்கிவைத்தாா்.
இதில் அரிமா சங்க நிா்வாகிகள், அரிமா மாவட்டத் தலைவா் மயில்சாமி, பழனி பிபிஎன் மருத்துவமனை மருத்துவா்கள் காா்த்திக், விமல், பண்ணாடி ராஜா கந்தசாமி, பெருமாள் அசோக், சாய் கிருஷ்ணா மருத்துவமனை அரிமா சுப்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

