பழனி மலைக்கோயிலில் காா்த்திகைத் திருநாள்
பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு, அதிகாலையிலேயே சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா் விடுமுறை தினம், காா்த்திகை நாள் என்பதால், ரோப்காா், வின்ச், படிப்பாதைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருந்தனா். கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்யக் காத்திருந்தனா். இதனால், சுவாமி தரிசனத்துக்கு சுமாா் மூன்று மணி நேரமானது.
மாலையில் திருமுருக பக்த சபா சாா்பில், மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இரவு சின்னக்குமாரசாமியின் தங்கமயில் புறப்பாடு, தங்கத் தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் பாா்த்து பரவசமடைந்தனா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.

