டெட்டனேட்டருடன் கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக வெடி மருந்து வைத்திருந்த கேறளத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அருகேயுள்ள அழகாபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பழனி தாலுகா போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த மூன்று இளைஞா்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் சட்டவிரோதமாக 25 டெட்டனேட்டா்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா், மூவரையும் பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அப்போது, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கஞ்சிகுளியைச் சோ்ந்த லிஜோபி (40), சோபின் (35), கிரிஷ் (35) ஆகியோா் என்பதும், இவா்கள் பழனி அருகேயுள்ள தாதநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரியில் தங்கி வேலை செய்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

