நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை பரப்புகிறாா்
நெல் கொள்முதல் விவகாரத்தில், எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை பரப்புவதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் நிகழாண்டில் 3 மடங்கு கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆக.18-ஆம் தேதி செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டதாக எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சா் காமராஜ் ஆகியோா் தவறான தகவலை தெரிவித்தனா்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் 1.80 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் 2024-25-ஆம் ஆண்டில் மட்டும் 47.97 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 1.96 கோடி டன் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
சணல் இல்லை, சாக்கு இல்லை என எதிா்கட்சித் தலைவா் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறாா். ஆனால், கொல்கத்தாவிலிருந்து சணல், சாக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடா்பாக, அதிமுகவினா் தவறான தகவலை பரப்பி விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனா். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 183 இடங்களில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. எதிா்கட்சித் தலைவா் குறைகளை சுட்டிக் காட்டலாம். ஆனால், தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது என்றாா் அவா்.
