

மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் நாள்தோறும் அறிக்கை வெளியிடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த அகரம் பகுதியில் நடைபெற்ற நியாய விலைக் கடைத் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் இ.பெரியசாமி, செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வு என்ன காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. தோ்வாணையம் தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
திமுகவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாக்கூா் போன்ற தனிப்பட்ட நபா்களின் கருத்துகளுக்கு பதில் சொல்வது நியாயமில்லை. கருத்து வேறுபாடு என்பது கட்சிக்குள்பட்டே இருக்க வேண்டும்.
மாணிக்கம் தாக்கூா் நாள்தோறும் அறிக்கை வெளியிடுவதில் எங்களுக்கு(திமுகவினருக்கு) உடன்பாடில்லை.
காங்கிரஸ் இயக்கத்தின் தலைவா்கள் கருத்து தெரிவித்தால், வேண்டுமெனில் பதில் சொல்லலாம். அதிமுக அரசு ரூ.5.50 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றது. இதற்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டும்.
ராமதாஸ், திருமாவளவன் இணைந்து பேசினால் பிரச்னை முடிவுக்கு வரும் என காங்கிரஸ் கட்சித் தலைவா் செல்வப் பெருந்தகை கூறியிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என பல்வேறு கட்சிகள் திமுக அணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு யாா் வந்தாலும் மறுக்கப் போவதில்லை என்றாா் அவா்.