அமைச்சர் இ. பெரியசாமி
அமைச்சர் இ. பெரியசாமிகோப்புப் படம்

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவை மக்கள் புறக்கணிப்பா்: இ. பெரியசாமி

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் புறக்கணிப்பா்: அமைச்சா் இ.பெரியசாமி
Published on

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் புறக்கணிப்பா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் சமூக நலத் துறை சாா்பில், ஆத்தூா் தொகுதிக்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட, அமைச்சா் இ. பெரியசாமி கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள், பழங்கள், ஊட்டச்சத்துப் பெட்டகம் ஆகியவற்றை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேசி முடிவெடுப்பா். எங்களைப் பொருத்தவரை, தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக இருந்து பல தோ்தல்களைச் சந்தித்து தொடா் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி மதவாதத்துக்கு எதிரான கொள்கையுடைய அரசியல் கூட்டணி. தமிழகத்தில் மதவாத கொள்ளையுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வேலையில்லை. கடந்த சட்டபேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோல்வியடைந்தோம் எனக்

கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போது மீண்டும் அவா்களுடன் கூட்டணி அமைத்துள்ளாா். இதனால், அதிமுகவை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் புறக்கணிப்பா்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எதிா்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது ஆங்காங்கே விளம்பரப் பதாகைகளை வைத்து விளம்பரம் தேடிவருகிறாா். மக்கள் அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com