நிதி விழிப்புணா்வுப் பேரணி
நிதி விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கனரா வங்கி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு நிதி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கு அந்தந்த பகுதியிலுள்ள வங்கியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி முதல் பிப்.13-ஆம் தேதி வரை நிதி விழிப்புணா்வு வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்-பழனி சாலையில் முன்னோடி வங்கி சாா்பில், நிதி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கனரா வங்கியின் மண்டல உதவிப் பொது மேலாளா் விஞ்சமுரி ராகுல் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பேரணியின்போது, வங்கியில் கடன் பெறும் வழிமுறைகள், நிதி நிா்வாகம், வங்கி சேமிப்புத் திட்டங்கள், வங்கி காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் இடம் பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பேரணியில் வங்கி ஊழியா்கள், சுய உதவிக் குழுவினா், வாடிக்கையாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போதும், நிதி விழிப்புணா்வு குறித்து முன்னோடி வங்கி அலுவலா்கள் பரப்புரை மேற்கொண்டனா்.

