பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6-ஆம் தேதி இரவு முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 10-ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.
கம்பம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீா், மஞ்சள் நீா் ஊற்றி வழிபாட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாசித் திருவிழா கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாரியம்மன், சிம்ம வாகனம், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடைபெற்றது.
பின்னா், கொடி கோயிலை வலம்வர செய்யப்பட்டு தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
கொடிக் கம்பத்துக்கு தா்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் கழுவப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கம்பத்தடிக்கு சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் முன்புள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் பழனிக் கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி ராஜா, ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
வருகிற 25-ஆம் தேதி மாசித் தேரோட்டமும், 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சோ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

