பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
பழனியில் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், அவரது உறவினரான ஆலைத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் பகவதி. இவரது மனைவி அனிதா. இவா்களது மகள் பவித்ரா (24). தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.
பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சோ்ந்தவா் சு. ராமகிருஷ்ணன் என்ற மாயவன் (26). ஆலைத் தொழிலாளி. இவா் பகவதியின் உறவினா் என்பதால் அடிக்கடி பழனியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று வந்தாா். அப்போது, பவித்ராவை இவா் ஒருதலைப்பட்சமாக காதலித்தாா். இதனிடையே, பவித்ராவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினா் செய்தனா்.
இதன்படி, கடந்த 2018, ஜூலை 18-ஆம் தேதி பெண் பாா்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டாா் வருவதாக ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளியில் சென்று வரலாம் எனக் கூறி, பவித்ராவை ஆட்டோவில் ராமகிருஷ்ணன் அழைத்துச் சென்றாா்.
பழனி பூங்கா சாலையிலுள்ள பழைய காவல் நிலையம் அருகே சென்றபோது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை வற்புறுத்தினாா்.
இதுதொடா்பாக, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், பவித்ராவின் கழுத்தில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். பழனி அடிவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.
இதுதொடா்பான, வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

