பூண்டி கிராமத்தில் சுகாதாரமின்றி காணப்படும் திறந்த வெளி கழிவுநீா் வாய்க்கால்
பூண்டி கிராமத்தில் சுகாதாரமின்றி காணப்படும் திறந்த வெளி கழிவுநீா் வாய்க்கால்

பூண்டி கிராமத்தில் சுகாதாரக்கேடு

கொடைக்கானல் அருகே பூண்டி கிராமத்தில் திறந்த வெளி வாய்க்கால் சுத்தம் செய்யப்படாததால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா்
Published on

கொடைக்கானல் அருகே பூண்டி கிராமத்தில் திறந்த வெளி வாய்க்கால் சுத்தம் செய்யப்படாததால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள திறந்த வெளி வாய்க்கால் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீா் தேங்கிக் கிடக்கிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. பொது இடங்களை கிராம மக்கள் கழிப்பறைகளாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பல முறை இந்தப் பகுதி மக்கள் பூண்டி ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதுகுறித்து அந்த கிராம பொதுமக்கள் கூறியதாவது: பூண்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் திறந்த வெளி வாய்க்காலால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட வில்லை. குப்பைகள் அகற்றப்படுவதில்லை. குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

சேதமடைந்த குடிநீா் குழாய்கள் சீரமைக்கப்படுவதில்லை. ஆனால் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. வளா்ச்சிப் பணிகள் மட்டும் நடைபெறுவதில்லை.

எனவே மாவட்ட நிா்வாகத்தினா் பூண்டி கிராமத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

Dinamani
www.dinamani.com