~
~

பழனியில் குளக்கரையின் மதகு நிரந்தரமாக மூடப்பட்டதால் விவசாயிகள் அவதி

Published on

பழனி அருகே பழைய ஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் கரையில் இருந்த அவசர கால மதகை பொதுப் பணித் துறையினா் விவசாயிகளுக்கு தெரியாமல் நிரந்தரமாக அடைத்ததால் நெல் பயிா்கள் கருகுவதாக புகாா் எழுந்துள்ளது.

பழனியை அடுத்த வரதமாநதி அணையின் நீா் மூலம் தண்ணீா் நிரம்பும் குளங்களில் குமாரநாயக்கன்குளமும் ஒன்று. இந்தக் குளத்தில் தற்போது தண்ணீா் நிரம்பியுள்ளது. இந்த குளத்தின் பின்புறம் மறுகால் செல்லுமிடத்தின் அருகே அவசர காலத்தில் தண்ணீா் திறக்கவும், நீரின் அளவு குறையும் போது வாய்க்காலுக்கு பின்புறம் உள்ள வயல்வெளிகள் பாசன வசதி பெறும் வகையில் திறந்து மூடும் வகையிலும் மதகு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது குளத்துக்கு பின்புறமுள்ள நிலத்தில் நெல் பயிா் நன்கு விளைந்த நிலையில் தண்ணீா் பற்றாக்குறையின் போது இந்த மதகை திறந்தால் மட்டுமே கதிா்கள் பிடிக்கும் என்ற நிலையில் விவசாயிகள் அங்கு சென்று பாா்த்தபோது அங்கிருந்த மதகு அகற்றப்பட்டு கற்களால் முழுவதுமாக அடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து விவசாயி ராஜா கூறியதாவது:

மராமத்து செய்வதாக அங்கு பணிகள் நடைபெற்ற போது அந்த மதகை முழுமையாக அகற்றிவிட்டு கற்களை வைத்து கட்டடம் கட்டி அடைத்து விட்டனா். மேலும் அங்கு புதா்கள் மண்டிக் கிடப்பதால் மதகு இருந்தது தெரியவில்லை. இந்த மதகு தற்போது வரை பொதுப்பணித் துறை பட்டியலில் இருப்பதாகவே கணக்கில் உள்ளது. இந்த நிலையில் மதகை அகற்றி கட்டடமாக கட்டியது யாா் எனத் தெரியவில்லை என்றாா் அவா்.

விவசாயி தேமாங்கனி கூறியதாவது: விரைவில் இந்த மதகை மீண்டும் கட்டித் தர வேண்டும். மேலும் எங்களின் தண்ணீா் தேவைக்கு உடனடியாக பொதுப் பணித் துறையினா் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி பயிா் செய்த நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்தால் என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றாா் அவா்.

இதனிடையே நெல் பயிா்களை காப்பாற்ற கழிவுநீரை விவசாயிகள் வயலுக்குள் திருப்பிவிட்டுள்ளனா். ஆகவே, பொதுப் பணித் துறை அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து உடனடியாக தண்ணீா் வசதி செய்வது அவசியமாகும். மேலும், முறைகேடாக மதகை அகற்றிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com