சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

அரசு மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திண்டுக்கல்லில் அரசு மதுக் கடையை மூடக் கோரி மாமன்ற உறுப்பினா் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திண்டுக்கல் மாநகராட்சி 11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் மாரியம்மாள் தலைமையில் பழனி சாலையிலுள்ள அரசு மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :28 மே 2026, 3:55 am IST

திண்டுக்கல்லில் அரசு மதுக் கடையை மூடக் கோரி மாமன்ற உறுப்பினா் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல், பழனிச் சாலை மாவட்ட சிறைச் சாலை சந்திப்பிலிருந்து 11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் மாரியம்மாள் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டா். இந்தச் சாலையில் அமைந்துள்ள அரசு மதுக் கடையை மூடக் கோரி முழக்கமிட்டவாறு, ஊா்வலமாகச் சென்றனா். கடை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அரசு மதுக் கடையை மூடுவது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் அரபு முகமது, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக 11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் மாரியம்மாள் கூறியதாவது:

திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் சுமாா் 25 ஆண்டுகளாக அரசு மதுக் கடை ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையினால் இந்தப் பகுதி பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனா். மது குடிப்பதற்கு, சாலைகளில் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பொது குடிநீா் தொட்டியிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்துகின்றனா். மதுப் புட்டிகளை வீதிகளில் வீசிச் செல்கின்றனா்.

மேலும் மதுக் கடை முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த வழியாகச் செல்லும் பொதுமக்களிடம், மது போதையில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனா். இந்த மதுக் கடையினால் 3 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மதுக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி, பல முறை மனு அளித்தும்கூட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக அரசு மூடுவதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகள் பட்டியிலிலும், இந்த மதுக் கடை இடம் பெறவில்லை. கோயில், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே இருப்பதால், இந்த மதுக் கடையை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.