பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களின் கழிப்பறைகளை பொதுமக்கள் உபயோகப்படுத்த அனுமதிக்கும் ஆணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெ. செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெட்ரோல், டீசல் நிலைய கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பான மதுரை மாநகராட்சி ஆணையர்அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், கழிப்பறைகளை பொதுமக்கள் உபயோகப்படுத்தும்போது சில பிரச்னைகளும் ஏற்படும்.
பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்காகவே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு இன்மையால் 6 மாதங்களில் அவற்றை உபயோகிக்க முடியாத சூழலே ஏற்படுகிறது.
கழிப்பறைகளை பராமரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஒதுக்கியுள்ள விற்பனையாளர் கமிஷனில் உள்படுத்தப்பட்ட தொகை போதுமானதாக இல்லை.
மேலும், மத்திய அரசின் எண்ணெய், எரிவாயு துறையிடம் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விளக்கத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய கழிப்பறைகளை பொதுமக்கள் உபயோகிப்பதற்கு அனுமதிப்பதற்கான ஆணைகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் விளக்கம்: பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தின் கருத்து குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகரிடம் கேட்டபோது அவர் கூறியது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் அந்தந்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சிக்கு வந்துள்ள மத்திய அரசின் சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்தே பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய கழிப்பறைகள் பயன்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கழிப்பறை பயன்பாட்டை பொதுமக்கள் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் உடைய பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மட்டும் அதை அனுமதிக்கலாம் என்றார்.