மதுரை வடமலையான் மருத்துவமனையில் ஜப்பான் மருத்துவர்கள் உதவியுடன் இருதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருதயத் தசைகளுக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாயில் நாள்பட்ட அடைப்பு ஏற்படும் நபருக்கு பொதுவாக "பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் "ஆஞ்சியோ பிளாஸ்டி' முறையில் ரத்தக்குழாய் அடைப்பை வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள் சரிசெய்து வருகின்றனர்.
இந்த சிகிச்சை முறையை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய மருத்துவர்கள் மசானரி தெரமுரா, பியிமிடாக்கா ஹொசாகா ஆகியோர் உதவியுடன் வடமலையான் மருத்துவமனை இருதயநோய் சிகிச்சை நிபுணர்கள் எம்.சீனிவாசன், எஸ்.அமுதன், பி.ஆர்.ஜே. கண்ணன், எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் நோயாளிகளுக்கு "ஆஞ்சியோ பிளாஸ்டி' மூலம் ரத்தக்குழாயில் இருந்த நாள்பட்ட அடைப்பை அகற்றினர். இந்தச் சிகிச்சை முறை மதுரை மக்களுக்கு கிடைத்த வரபிரசாதமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.