மதுரையில் கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை வண்டியூர் நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அண்ணாநகர் போலீஸார் நேதாஜி நகருக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வியாபாரியான லோடு முருகன் வீட்டின் முன்பாக சிலர் சந்தேகத்துக்கிடமாக இருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். அதில் இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வரிச்சியூர் ராஜாக்கூரைச் சேர்ந்த அருண்பாண்டி(23), கார்த்தி(22) ஆகியோர் என்பதும், அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து கஞ்சாவை விற்பனைக்காக பிரித்து கொண்டிருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, லோடு முருகன் வீட்டின் திண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற
6 பேரைத் தேடி வருகின்றனர்.