அரசு மருத்துவமனை மருந்தகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனை பொது அறுவைச் சிகிச்சைத்துறை சார்பில், நவீன சாவித்துளை லேப்ராஸ்கோபிக் துறையின் அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த இரண்டு நாள்களா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாவித்துளை லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை நேரடி செய்முறை பயற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற பயிலரங்கு தொடக்க விழாவுக்கு மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்து ராஜூ தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ பயிலரங்கை தொடங்கிவைத்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சாவித்துளை அறுவைச் சிகிச்சை தொடர்பான அகில இந்திய மாநாடு அரசு மருத்துவமனையில் நடைபெறுவது இதுவே முதல்முறை. இளம் மருத்துவர்களுக்கு இந்த மாநாடு மிக உபயோகமாக இருக்கும். மதுரை அரசு மருத்துவமனை ஏராளமான சாதனைகளை செய்து வருகிறது. அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்குவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருந்தகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும். அதன்பின்னர் மருந்து பற்றாக்குறை இருக்காது.
அரசு மருத்துவமனைகளில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தவிர்த்து, மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னர் மருத்துவமனையில் பல்வேறு நிலையிலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
பயிலரங்கில் அகில இந்திய தலைவர் ஜாமீர் பாஷா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, அறுவைச் சிகிச்சைத்துறைத் தலைவர் மருதுபாண்டி, மாநாட்டுச் செயலர் எஸ்.ஆர்.தாமோதரன், முதுநிலை மருத்துவர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.