மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மதுரையில் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் 9, 10 ஆம் வகுப்புகள், பிளஸ் 1, பிளஸ் 2 என நான்கு பிரிவாகப் பிரித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளை ஜூன் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர். போன்ற தலைப்புகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 22 ஆம் தேதி வட்டார அளவிலும், 24 ஆம் தேதி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.