விருதுநகர் பனைக்குடி கிராமத்தில் மதுக்கடையை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் பனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த வி.கந்தசாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இத்தனை ஆண்டுகளாக பனைக்குடி கிராமத்தில் மதுக்கடை அமைக்கப்பட வில்லை. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து திருச்சுழியில் மூடப்பட்ட மதுக்கடையை, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பனைக்குடியில் திறந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மது போதையில் இங்குள்ள பெண்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர்.
இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. எனவே பனைக்குடியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுக்கடையை மூடுவது தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது 3 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.