திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் சமையல் எண்ணெய் கிட்டங்கியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை நகரில், மாநகராட்சி 95 ஆவது வார்டு அலுவலகம் அருகே தனியார் நிறுவனத்தின் எண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு, சூரியகாந்தி சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியன வைக்கப்பட்டிருந்தன.
இங்கிருந்து, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், புதன்கிழமை மாலை இந்தக் கிட்டங்கியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மதுரை திடீர் நகர் தீயணைப்புத் துறையினர், அதிகளவில் எண்ணெய் இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் திணறினர். தீ மேலும் பரவியது. எனவே, கிட்டங்கியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்களை போலீஸார் வெளியேற்றி, அந்த வீடுகளில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளையும் அகற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். அப்பகுதி முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில், தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர் வீரணன் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரவு நேரத்தில் கிட்டங்கியில் பணியாளர்கள் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்தவித காயமும் இல்லை. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.