சரக்கு மற்றும் சேவை வரிக்கு வணிகர்கள் நிரந்தர எண் பெறுவதற்கு செப்.30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட வணிகவரி இணை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை வணிகவரிக் கோட்டத்தில் முந்தைய மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் (வாட்) பதிவு செய்திருந்த 36 ஆயிரத்து 636 வணிகர்கள் ஜிஎஸ்டி-க்கு முழுமையாக மாறியுள்ளனர். இருப்பினும் ஏறத்தாழ 20 ஆயிரம் வணிகர்கள் உரிய ஆவணங்களை ஜிஎஸ்டி-க்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக ஜிஎஸ்டி எண், நிரந்த எண்ணாக மாற்றம் செய்யப்படவில்லை. உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து நிரந்தர ஜிஎஸ்டி எண் பெறுவதற்கு செப்.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில், தாற்காலிக ஜிஎஸ்டி எண் ரத்து செய்யப்படும். ஆவணங்கள் பதிவேற்றம் செய்து நிரந்தர ஜிஎஸ்டி எண் பெறுவதற்கு வணிகர்களின் வசதிக்காக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வணிக வரி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.