காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மதுரை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பூட்டு போட முயன்ற, பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 44 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட 17 அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்து, தபால் அலுவலகத்துக்குள் நுழைந்து பூட்டுபோட முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் வெளியேற்ற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.