உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை சமுதாயக்கூடம் கட்ட தடையாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதை அடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட பா.புதுப்பட்டி (ஜெயராஜ் நகர்) காலனியில் ஒரு சமூகத்தினருக்கு உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சமுதாய கூடத்தை கட்ட விடாமல் ஒரு குடும்பத்தினர் தடுத்து
ஆக்கிரமித்து இருந்தனராம். இது குறித்து அதிகாரிகள் நவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றிய குழு சார்பில் வியாழன்று காலை கருமாத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் ராமசந்திரன், துணை வட்டாட்சியர், செல்லம்பட்டி ஒன்றிய ஆணையாளர்,கிராமநிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி சமுதாயக்கூடம் கட்டட பணியினை துவக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்டட பணிக்கு இனி இடையூறு ஏற்படாது எனவும், கட்டட பணிகளை குறிப்பிட்ட தேதியில் துவக்கவும் எழுத்து மூலம் உறுதிமொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கி கொள்வோம் என்று கூறினர்.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி , ஒன்றியக்குழு உறுப்பினர் சி.பி.மகாராஜன், மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.