விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: இளைஞர் கைது
மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த இளைஞரை திருமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருமங்கலம் விருதுநகர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி(48). திருமங்கலம் காமராஜபுரத்தைச் சேர்ந்த முகேஷ்(எ)முருகேஷ்வரன்(24) மற்றும் அவரது பெற்றோர்கள் ஆறுமுகம், சுமதி உறவினர் மணி உள்ளிட்டே 5 பேர் ஆண்டியின் மகனுக்கு மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் பேரம் பேசி, முன் பணமாக ரூ.3 லட்சம் வாங்கினார்களாம்.
ஆனால் பணம் வாங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகியும் வேலை வாங்கித்தரவில்லையாம். மேலும் பணத்தை திரும்பக்கேட்ட போதும் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து ஆண்டி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முகேஷ்(எ)முருகேஷ்வரனைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகம், சுமதி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.