மதுரை மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை பள்ளிகளிலேயே பதிவு செய்துகொளளலாம் என வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்து மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காக தங்களது பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் வரும் 16 ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்படுகிறது. ஆகவே, மதிப்பெண் சான்றுகளைப் பெற்ற மாணவ, மாணவியர் தங்களது பள்ளிகள் மூலம் வரும் 30 ஆம் தேதி வரை வேலைவாய்ப்புக்கான பதிவை மேற்கொள்ளலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என அனைத்திலும் பயின்ற மாணவ, மாணவியர் தங்களது பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவை மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயின்றவர்களும் தங்கள் பள்ளிகளின் மூலமோ அல்லது மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலோ பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மாணவ, மாணவியர் அணுகி பதிவு செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.