மதுரையில் முன்விரோதத் தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர்கள் மூவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டிசெல்வம்( 20). மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.பாண்டிசெல்வத்துக்கும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கல்லூரி முடிந்து பாண்டி செல்வம் மேலூர் செல்வதற்காக மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவர்கள் சஞ்சய், ஸ்ரீதர், பிரேம்குமார் ஆகிய மூவரும் பாண்டி செல்வத்தை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பாண்டி செல்வம் அளித்தப்புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் மாணவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.