மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை உத்தங்குடி டி.எம்.நகரைச் சேர்ந்த வரதராஜன் மனைவி விஜயா(57). இவரது பேத்தி சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். அவரை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக விஜயா வியாழக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கச் சங்கிலி, வளையல், நெக்லஸ், தோடு உள்ளிட்ட 16 பவுன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருள்கள், ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். விஜயா அளித்தப் புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.