மதுரை மாநகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் உரிமம் (ஈ&ஞ) மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமத்தைப் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் ஏற்கெனவே மார்ச் 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசமானது வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பைப் பயன்படுத்தி நான்கு மண்டல அலுவலகங்களில் மற்றும் மாநகராட்சியின் மைய அலுவலகத்திலும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து நாள்களிலும் கட்டணத்தை நேரடியாகச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம்.
உரிமம் புதுப்பித்தலுக்குரிய கட்டணம் செலுத்திய ரசீதை பெற்று புதுப்பித்தல் படிவத்துடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்து தங்களது உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். சொத்துவரி, தொழில்வரி, திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி செலுத்தினால் மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும். உரிமங்கள் புதுப்பிக்கப்படாத வணிக நிறுவனங்கள் மீது மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் முகாம்: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 42 பேர் மனுக்களை ஆணையர் அனீஷ்சேகரிடம் அளித்தனர். குடிநீர், பாதாளசாக்கடை இணைப்புகள் மற்றும் கட்டட வரைபட அனுமதி கோரியே அதிகமானோர் மனு அளித்தனர். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
குறைதீர் முகாமில் மண்டலம் 2 அலுவலக உதவி ஆணையர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.