மதுரை சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக தேர் நிறுத்துமிடங்களில் முகூர்த்தக்கால் பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் , கள்ளழகர் கோயில் ஆகியவை இணைந்து நடத்தும் விழாவாகும். திருவிழாவின் முதல் கட்டமாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சார்பில் தேர்களை தயார்படுத்தும் வகையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
கீழமாசி வீதியில் உள்ள சுவாமி, அம்மன் தேர் நிறுத்தப்பட்டுள்ள தேரடி மண்டபம் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக முகூர்த்தக்காலுக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டன. பின்னர் மேள, தாளம் முழங்க சிவாச்சாரியார்கள், கோயில் அதிகாரி கணேசன் உள்ளிட்டோரால் முகூர்த்தக்கால் எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது.
சித்திரைத் திருவிழாவுக்காக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வாஸ்து சாந்தி வரும் ஏப்ரல் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து புதன்கிழமை (ஏப்.18) காலையில் 10.05 மணி முதல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பர்.
சுவாமி, அம்மன் எழுந்தருள்வதற்காக தங்கச் சப்பரம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், தங்கப் பல்லக்கு, குதிரை வாகனம், நந்திகேஸ்வரர், யானை வாகனம், யாழி வாகனம் ஆகியவை தயார்படுத்தப்பட்டு வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப்ரல் 24-ம் தேதி இரவு விருச்சிக ராசியில் அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி திக்விஜயமும், 27-ம் தேதி காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப். 28-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 29-ம் தேதி தீர்த்த
வாரியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி திங்கள்கிழமை கள்ளழகர் மதுரை ஆழ்வார்புரம் பகுதி வைகையாற்றில் எழுந்தருள்கிறார்.