மதுரையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் குமரேசன் (62). கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்க்கப்பட்ட குமரேசனுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூரை சேர்ந்த சிவபாண்டியன் மனைவி பூங்கோதை(65). சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பூங்கோதை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மதுரை தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.