மதுரை அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 42 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் காளிகாப்பான் பகுதியில் ஒத்தக்கடை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரில் இருந்த 3 பேரிடம் சந்தேகத்தின்போரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள், மதுரை கோ.புதூரைச் சேர்ந்த ரமேஷ்வாசன் (54), அகஸ்டியன்மணியார் (44), சென்னையைச் சேர்ந்த சையது அஸ்மத்துல்லா (45) ஆகியோர் என்பதும் ஒத்தக்கடையில் லாட்டரியில் பரிசு விழுந்தவர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து 42 பவுன் நகைகளை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மூவரும் வெளிநாடுகளுக்கு வேலைசெய்ய ஆள்களை தேர்வுசெய்து அனுப்பினராம். அந்த தொழில் சரிவர நடைபெறாததால், வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து பணம் பறிக்க திட்டமிட்டனர். அப்போது ஒத்தக்கடையைச் சேர்ந்த பெத்துராஜூ என்பருக்கு கேரள லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு விழுந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது பெண்கள் மட்டுமே இருந்ததால் 42 பவுன் நகைகளை கைப்பற்றிய அவர்கள் பின்னர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். மூவரையும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.