தமிழகம் முழுவதும் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.4,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி, மதுரையில் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப் பேரணியை, தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடக்கிவைத்துப் பங்கேற்றனர்.
முன்னதாக, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பேரிடர் இன்னல் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் அதிக அளவு மழை பெய்கிறது.கி குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தேவையில் 60 சதவீதம் தண்ணீர், வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் கிடைக்கிறது.
பருவமழை அதிகம் பெய்தால், அதை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 4, 415 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
பேரணியில், இயற்கை பேரிடர்களின்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
பேரணியானது, சாத்தமங்கலம், கே.கே. நகர், ராஜா முத்தையா மன்றம் வழியாக ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் முடிவடைந்தது. பின்னர், அங்கு தீயணைப்புத் துறையினர் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன், ஆணையர் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கே. மாணிக்கம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.