மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
மழையின் காரணமாக எழுமலை 1 ஆவது மற்றும் 9 ஆவது வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. எழுமலை கனக்கன்குளம் கண்மாய்க்கு ஓடைவழியாக சென்று கொண்டிருந்த மழை நீர், எழுமலை -எம்.கல்லுப்பட்டி பிரதான சாலையிலுள்ள பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் புகுந்தது. இதனால் இரவில் பொது மக்கள் அச்சத்தில் தவித்தனர்.
தகவலறிந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மதுரை பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, செயல் அலுவலர் ஜெயமாலு, ஆகியோர் முன்னிலையில் விடிய, விடிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அடைப்பு ஏற்பட்ட வரத்து கால்வாயிலுள்ள மண் மற்றும் கழிவுப் பொருள்களை 3 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி 4 டிராக்டர்கள் மூலம் அள்ளி வெளியேற்றினார்கள்.
இப் பணியில் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர் அன்புச்செல்வம், பேரூராட்சி அலுவலர்கள் பரமசிவம், நாகராஜ், செல்லப்பாண்டி, மும்மூர்த்தி, உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இரவோடு இரவாக மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.