குடும்பத் தகராறு காரணமாக, பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை சக்கிமங்கலம் அருகே உள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (28). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மனமுடைந்த ஜெயலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, இதைத் தடுக்க முயன்ற ராமச்சந்திரன், அவரது உறவினர் குருசாமி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அதையடுத்து, மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயலட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிலைமான் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.