மதுரை ரயில் நிலையத்தில் ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்ட பயணியிடம், பாதுகாப்புப் படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
மதுரையைச் சேர்ந்த ஆர். ராமராஜன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து சென்னை-செங்கோட்டை விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மதுரை நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர், தான் கொண்டு வந்த பெட்டியை ரயிலிலேயே தவறவிட்டது தெரியவந்தது. அந்தப் பெட்டியில் ரூ.2.25 மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளன. உடனே அவர் சுதாரிப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இதையறிந்த அதே ரயிலில் மற்றொரு பெட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்களான ஆனந்த் மற்றும் அமீர், ரயிலில் இருந்தவாறே ராமராஜன் பயணித்த பெட்டி, உடைமைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர், அவர் பயணித்த பெட்டிக்குச் சென்ற வீரர்கள், அவர் குறிப்பிட்ட உடைமைகளைக் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனர்.
இது குறித்து, மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில் ராமராஜன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பயணித்த விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிற்காது என்றும், எனவே செங்கோட்டைக்குச் சென்று உடைமைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, காலை 7 மணிக்கு மதுரை வழியாகச் சென்ற செங்கோட்டை ரயிலில் ஏறிய அவர், காலை 10.45 மணிக்கு செங்கோட்டையை அடைந்து உரிய ஆவணங்களைக் காண்பித்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரிடமிருந்து தனது உடைமைகளைப் பெற்றுக்கொண்டார்.
அவசர நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஆனந்த் மற்றும் அமீருக்கு, கோட்ட மேலாளர் நீனு இட்டியரா, கோட்ட தலைமை பாதுகாப்பு ஆணையர் எம்.எப். மொய்தீன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.