மதுரையில் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தேர்தல் பிரசாரத்தில் திமுக நாகரிகமற்ற தனி நபர் விமர்சனத்தை முன் வைக்கிறது. அதிமுக அரசு மீது குறை சொல்வதற்கு வழியில்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் இவ்வாறு பேசி வருகிறார். திமுக மீது ஆளுங்கட்சி வருமான வரித் துறையை ஏவி விட்டுள்ளதாகக் கூறுவது ஏற்புடையதல்ல.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அழகாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு ஓட்டு கிடைக்காது. தேர்தலின்போது மட்டுமே வரக்கூடிய நடிகர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என கனவு காண்கின்றனர்.
இன்றைய தலைவர்களில் பிரதமர் நரேந்திரமோடி, சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்து வருகிறார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் என்பதால் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனைகளோடு, பிரதமர் மோடியின் சாதனைகளையும் குறிப்பிட்டு வருகிறோம் என்றார்.