மேலூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் கடந்த சில தினங்களாக எரிந்து வெளிவரும் புகைமூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலூர் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு மலம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கவும் மக்கும் குப்பையை உரமாக்கி
விவசாயிகளுக்கு வழங்கவும் பல லட்சம் செலவில் கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அடிக்கடி குப்பைகளை எரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
எரியும் குப்பைகளில் இருந்து வெளிவரும் புகை சின்னபெருமாள்பட்டியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களும், அருகிலுள்ள 2 பள்ளிகளில் படித்துவரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் எரியும் தீயை அணைக்க மேலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.